Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்




சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையின் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் எங்கள் வழக்கமான குட்டி சுவற்றில் நண்பர்களோடு சிகரெட்டும் சிரிப்புமாக இருந்த ஒரு மாலைப்பொழுதில் அலெக்ஸ் லாரன்சிடம் இருந்து அழைப்பு வந்தது. அது, ஊட்டி ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட என் பள்ளி ஆசிரியர் பீட்டரின் மரணச் செய்தி. மிக துயரமான செய்தி அது. அன்று இரவு ரம்பா பாருக்கு சென்று நிறைய குடித்தேன், சுப்பு மெஸ்ஸில் இருக்கும் சப்ளையரோடு வாய்த்தகராறு முற்றி அவரை ஆத்திரத்தில் தாறுமாறாக போட்டு உதைத்தேன். நண்பர்கள் சண்டையை நிறுத்தி என்னை சமாதனாம் செய்து கல்லூரி விடுதியில் ஒரு அறையில் போட்டு அடைத்தனர். பெரும் கூச்சலுக்கு பிறகு ஒரு காகிதமும் பேனாவும் கொடுத்துவிட்டு ஏதாவது எழுதுங்கண்ணா மனசு கொஞ்சம் ப்ரீ ஆயிடும் என்று ராஜசேகர் சொல்ல.. ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்றேன்.. தரப்பட்டது. இன்னும் கொஞ்சம் காகிதங்கள் வேண்டும் என்றேன். அதையும் கொண்டு தந்து விட்டு அண்ணா பக்கத்துக்கு ரூம்ல தான் இருக்கேன் ஏதாவது வேணும்னா கூப்பிடுங்கண்ணா என்று சொல்லிவிட்டு அறைக்கதவு தாழிடப்பட்டது. ஏதேதோ எழுதுகிறேன்.. என்னை அறியாமல் மெல்ல உறங்கிப்போகிறேன். அதன் பின் சில நாட்கள் கழித்து ராஜசேகர் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுக்கிறான். அதில் சில வரிகளில் அடிக்கோடு இடப்படிருக்கிறது. அது போதையில் நான் எழுதிய காகிதம் என்றாலும் சில வரிகள். வேறு மாதிரி இருந்தது.
அது..
" கொடைக்கானலுக்கு நான்கு முறை சென்றிருக்கிறேன் ஒருமுறை தற்கொலை செய்வதற்கு சென்ற கொடைக்கானலை கொஞ்சம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறேன் கொடைக்கானலை தவிர வேறெங்காவது நான் தேர்ந்திருந்தால் அந்த தற்கொலை நிகழ்ந்திருக்கலாம்.
இரவெல்லாம் அந்த சாலையில் இருந்து ஏரியை பார்த்துக்கொண்டிருந்தேன். அன்று இரவு அந்த ஏரி என் குழப்பமான மனதின் அலைகளை வாங்கி ஒரு ஆழ்ந்த ரகசியமென தனக்குள் புதைத்திருக்கலாம்.
தாகம் தணிக்க வரும் பறவை ஒன்று என் இரகசியங்களைக் குடித்திருக்கலாம். கடைசியாக சிகரெட் வாங்கிய கடையில் இருந்த கிழவனுக்கு என் மேல் எழுந்த சந்தேகத்தை, மேகங்களை போர்த்திக்கொண்டு கதகதப்பாய் உறங்கிய நிலா ஒரு கனவென உணர்ந்திருக்கலாம்.
அந்த இடமெங்கும் என்னை நோக்கி கைகளை அசைத்துகொண்டிருந்த மரங்கள் அமைதியாக பாடியது என் அம்மாவின் பிரார்த்தனையாகவும் இருக்கலாம்.
என்னை அதட்டி பேருந்து நிலையத்திற்கு விரட்டிய காவல்காரனின் குரல், என் தந்தையின் கவலையாகவும் இருக்கலாம்.
அன்றிரவு எனக்குள் பிறந்த தெளிவு கடவுளின் கருணையாக இருக்கலாம்.
என் பிறந்த பூமியின் தொடர்ச்சிதானே அந்த மலைச்சிகரங்கள்.. ஒருவேளை சிகரங்கள் அந்த பள்ளத்தாக்கிடம் என் கடமைகளை பற்றி சொல்லி இருக்கலாம். "
எவ்வளவு யோசித்தாலும் நான் ஏன் இந்த வரிகளை எழுதினேன் எனக்கு புரியவில்லை.

Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

ஆதிக்குடில்

காமுற்ற ஆதிதெய்வம்  நிலத்தில் கீறிய நகசித்திரம் போல்  கண்களை ஆசிர்வதிக்கிறது  அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது.  பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை  எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன்  காய்ச்சிய  புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன்  கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச்  சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து  காட்டு நெல்லியின்  புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய  பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற  தேதிகளுக்கு முன்பே  மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!