Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்

10:09:2015
நேற்று இரவெல்லாம் 
குடகு மலையாக கிடந்தது உடல். 
மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை, 
அழுது புலம்பிய மேகங்களை, 
குளிராய் தழுவிய காற்றின் கைகளை, 
அதிகாலை பனித்துளிகளால் 
ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை, 
கண்ட பின்பும் என் காதல் 
அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது 
என்று நம்புகிறாயா..! 
அது நீ போகும் திசையெல்லாம் 
ஒரு மெல்லிய இசையாகி 
உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ.


11:09:2015
வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..!
"இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் 
வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..!

அப்படியா..! என்றாள்
"ஆமாம்" என்றேன்.
"அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள்.
"அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன்.
"அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள்.
"நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது" - என்றேன்.
"அப்படி சொன்னாதான அத நம்ம ஊருன்னு நீ ஒத்துக்குவ" - என்றாள்.
"அப்போ நீ சொன்ன மாதிரி அங்க வெயில் இல்லையா" என்றேன்..!
"அஞ்சேமுக்காலுக்கு எந்த ஊர்லப்பா வெயில் சுர்ருன்னு அடிக்குது" -என்றாள்.
"ஆனா அஞ்சேமுக்காலுக்கு எல்லா ஊர்லயும் கொஞ்சம் குளிருமில்ல"- என்றேன்.


12:09:2015
இன்று அதிகாலையும் 
நல்ல குளிர் என்றாள்
குடகில் குளிராமல் என்ன செய்யும்..!
எப்போதும் உன் உடலைத் 
தழுவியபடி இருக்கும் குளிராக 
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
வறண்ட உன் உதடுகளை
நாவினால் ஈரப்டுத்திக்கொண்டே இருக்கிறாய்,
உன் உதடாக 
மாறிவிட வேண்டும்போல் இருக்கிறதெனக்கு..!
குளிருக்கு இதமாய் 
கையுறை தரிக்கிறாய், 
நிராகரிப்பின் நெருப்பு 

கொழுந்துவிட்டு எரிகிறது என் கைகளில்..!





12:09:2015
மடிகேரியின் 
மலை முழுவதும் 
இருளும் பனியும் குளிருமாய் 
வியாபித்திருக்கிறது 
நம் உரையாடல்கள்..
நம் இருவருக்குமான இடைவெளியில் 
நெருப்பை எரியவிட்டு - பின் 
நிலவுக்குள் சென்று 
ஒளிந்து கொண்ட நேற்றைய இரவை 
பத்திரமாக வைத்திருக்கிறது 
காதல்


Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

ஆதிக்குடில்

காமுற்ற ஆதிதெய்வம்  நிலத்தில் கீறிய நகசித்திரம் போல்  கண்களை ஆசிர்வதிக்கிறது  அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது.  பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை  எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன்  காய்ச்சிய  புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன்  கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச்  சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து  காட்டு நெல்லியின்  புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய  பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற  தேதிகளுக்கு முன்பே  மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

நமக்கேயான தனிமை  வாய்க்கும் போதெல்லாம்   நெருப்பை எரியவிட்டு   பனியடர்ந்த பள்ளத்தாக்கின்   குளிருக்குள்   பதுங்கிக் கொண்டோமல்லவா..!   அந்த ரகசியங்களை   கிளன்டேல் காடுகள்   பத்திரமாய் வைத்திருக்கிறது  இன்றும்..!