ஞாயிறு, 25 ஜூலை, 2021

ஆதிக்குடில்


காமுற்ற ஆதிதெய்வம் 

நிலத்தில் கீறிய நகசித்திரம் போல் 

கண்களை ஆசிர்வதிக்கிறது

 அம் மலைக் கிராமம்.


உச்சியில் பெய்த மழைத்துளிகள்

கலகலவென ஓடி வந்து

கலங்கிய காவி நதியாகி

கால்களை நனைக்கிறது. 


பலாமரப்பட்டையில் தன்

காதலி பெயரை 

எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி.


மலை முகட்டின் ஆதிக்குடியில்

முதுவன்  காய்ச்சிய 

புல்தைலம் மணக்கிறது.


புல் குடியில் மூப்பன்  கட்டிய

கருகமணித் தாலியுடன்

நாளிகேர விளக்கேற்றும்

புலத்தி.


மலைப் புலத்தியின் சங்கின்

சில்வண்டின் ரீங்காரமென

குலவைச்  சத்தம்.


ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து 

காட்டு நெல்லியின் 

புளிப்பை ருசிக்கும் கருப்பியை

கடந்து செல்கிறேன்.


முள்வேலி மீது படர்ந்திருக்கிறது

முல்லையின் கந்தம்..

நாளிகேர நிழலில் வளரும்

நந்தியார்வட்டை.


தேக்கு மரத்தின் சிறிய 

பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற

கண்ணாடிக் கூண்டுக்குள்

குழந்தை இயேசுவுடன் மரியன்னை.


நிச்சயிக்கப்பெற்ற 

தேதிகளுக்கு முன்பே 

மன்னிப்பை கேடயமாகப்

பயன்படுத்திக் கொண்ட

ஆலீஸின் வீடு.


கால் நூற்றாண்டு கடந்தும்

என் ஆன்மாவை கருணையோடு

ஆசிர்வதிக்கிறது காதல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் ....