Skip to main content

Posts

Showing posts from November 26, 2012

பட்டாம்பூச்சிக் கதைகள்

அப்பா , "வாங்கிய வீட்டை" வாஸ்து பார்த்து திருத்தி கட்டிக்கொண்டிருகிறார் என்னிடம் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும்  அவருக்கு ரொம்ப ஆசைதான் ஆனால் அவரோடு பேசி வெகுநாள் ஆகிவிட்டது. அம்மா, எனக்கு ஒரு திருமணம் செய்து  பார்க்க ஆசைப்படுகிறாள். அம்மாவிடம் பிடிகொடுக்காமல் நழுவிசெல்வதே நலம் எனப்படுகிறது எனக்கு. வெகுநாள் வீட்டுக்கு வராத அண்ணன் அடிக்கடி அலைபேசியில் அழைத்துப்பார்க்கிறான் என் மனம் அதிலும் ஒட்டவில்லை. வீடுதிரும்புதல் இனி சாத்தியமா என்று தெரியவில்லை.. நினைவுகளின் தாழ்வாரங்களில் வழுக்கி வழுக்கி "சுயம்" மறந்து போக விரும்புகிறேன். எனக்கென்று வீடும் "நாம்" வாழ பார்த்து பார்த்து வாங்கி சேர்த்த  பொருட்களும்  நீ இல்லாத என் வீட்டில் என்னை பார்த்து கேலி செய்யதுவங்கிய நாள் முதலாய் இந்த "நாடோடி" வாழ்க்கையை  நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். இன்று இவ்வாறு நான் வாழ்ந்தது  தவறென என்றேனும் ஒருநாள் தோன்றக்கூடும். அறம்  இழந்த வாழ்க்கை நிறம் இழந்து போகவென பெய்யாதோ காலமழை..