Skip to main content

Posts

Showing posts from 2020

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕

பட்டாம்பூச்சிக் கதைகள்

12:05:2012 Memories: நவம்பர் மழையில் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது அந்த ஓடை. வேரோடு வெள்ளத்தில் தத்தளிக்கும் செம்பருத்திச் செடியை சுமந்தபடி வேகமெடுக்கிறது, தன் அன்பு மகள்களுக்காய் ஆரஞ்சு மரக்கிளையில் ஆறுமுகம் அப்பா கட்டித்தந்த ஊஞ்சல்.  நீ, கவிதாவுக்கும், புவனாவுக்கும், சத்தியபாமாவுக்கும் பறித்துத்தர வேண்டுமென கருதி வைத்துக் காத்திருந்த, ஆரஞ்சு, கொய்யாப்பழங்கள் அனைத்தும் கண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட அதே நாளில்..  காட்டேரி ஆற்றங்கரையில் என் கால்கள் நீருரிஞ்சி மரத்தின் வேர்களாய் நின்றிருந்ததென நேற்றைய கனவு முடிந்தது.  உன் கால்களை சுமந்தபடி கம்பீரமாய் கிடந்த கரும்பாலம் என் காதலை சுமந்தபடி துருப்பிடித்து இற்றுப் போன இதயமென ஆற்றின் கரைகளில்  உடைந்து கிடக்கிறது.  எப்போதேனும் நீ ஜன்னல் திறக்கும் போது உன் பாதங்களை முத்தமிட  காத்திருக்கும் அதன் உதடுகளையும், குளிரில் நடுங்கியபடி நீ ஜன்னலை அடைக்கும் போது துருப்பிடித்து ஓட்டை விழுந்த அதன் கண்களுக்கு கீழே  இப்போது ஓடிக்கொண்டிருக்கும் கரும்பால ஓடையையும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்..  ஒரு கவிதையின் வடிவில்.😍