ஒரு நவம்பர் மாதத்தின் முதல் நாளில் இங்கு தான் அழகான அந்த வெள்ளை நாய்க்குட்டி உன் பின்னால் வாலாட்டிக் கொண்டே வந்தது..! அன்று பழுத்த இலைகளை கண்களாக்கி நம்மைப் பார்த்துக்கொண்டிருந்த மரங்களை பத்திரமாய் வைத்திருக்கிறேன் நினைவுகளில். ஒவ்வொரு முறை கடக்கிறபோதும் வெள்ளை நாய்குட்டியாக மாறி வாலாட்டும் மனசை எங்கே ஒளித்து வைப்பது.
சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்த கதைகள் நீராகவும், சொல்லி முடித்ததும் உறைந்து நின்ற கதைகள் பாறையாகவும், "இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது. சொல்லாமல் இருந்த கதைகள் உப்பாகவும் , சொல்லி முடித்த கதைகள் மணலாகவும் மாறும். இந்த ஆற்றில் தான், பண்டிகை முடிந்ததும் சாமியை கரைக்கும் சடங்கையும் செய்கிறோம். கதைகளை போலவே கடவுளும் கல்லில் உறைந்தும், நீரில் கரைந்தும்..
10:09:2015 நேற்று இரவெல்லாம் குடகு மலையாக கிடந்தது உடல். மடிகேரியில் அலைந்து திரிந்த ஆன்மாவை, அழுது புலம்பிய மேகங்களை, குளிராய் தழுவிய காற்றின் கைகளை, அதிகாலை பனித்துளிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட மூங்கில் காடுகளை, கண்ட பின்பும் என் காதல் அந்த பாள்ளத்தாக்கில் தான் துயில்கிறது என்று நம்புகிறாயா..! அது நீ போகும் திசையெல்லாம் ஒரு மெல்லிய இசையாகி உன்னை வரவேற்பதை அறியாதவள் அல்ல நீ. 11:09:2015 வழக்கம் போல் எழுந்தவுடனே அவளை அழைத்தல்.. அவளோடோளாவுதல் என்றே துவங்கியது இந்தக் காலையும்..! "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு." - என்றேன்..! அப்படியா..! என்றாள் "ஆமாம்" என்றேன். "அதான் காலைலேயே வெயில் சுர்ருன்னு அடிக்குது"- என்றாள். "அன்னிக்கு மழை பெய்யுதுன்னு சொன்ன".- என்றேன். "அன்னிக்கு நீ வேறு குறள் சொன்னாய்" - என்றாள். "நம்ம ஊர்ல குறள் கேட்டா இதெல்லாம் நடக்குது&qu