Skip to main content

பட்டாம்பூச்சிக் கதைகள்


நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊருக்குள் வருவதும் போவதுமாய் இருக்கிறது  இந்த புகைவண்டி. பால்யங்களில் என் அம்மா எனக்கு ஊட்டியது ரயில் சோறு தான். ஊட்டி ரெயில் என்று சொல்வார்களே..! - "சோறூட்டி ஓடும் ரெயில்"
இப்போதும் எங்கள் ஊரில் எல்லா குழந்தைகளுக்கும் இந்த புகைவண்டியைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள்
15 வயது வரை இந்த ரயிலை கையசைத்து வழியனுப்பி இருக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் குறைந்தது முப்பது கைகளையாவது பதிலுக்கு அசைக்காமல் கடந்ததில்லை இந்த புகைவண்டி..
அன்றாடம் எங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மையாக வந்து போகும் இந்த புகைவண்டியை, விஞ்ஞானக்கண் கொண்டு கண்டதில்லை இதுவரையில்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட குதுகலமாய் கையசைக்கும் ஒரு குழ்ந்தையாய் என்னை மாற்றிவிட்டுப் போன இந்த புகைவண்டி "ஆய்ய்.. ட்ரைன்நு" என்று அப்போது என்னை உள்ளுக்குள் சொல்ல வைத்ததில் வியப்பொன்றும் இல்லை.
தினந்தோறும் ஊருக்குள் வந்து போகும் பால்காரனைப் போல இயல்பாய் வருவதும் போவதுமாய் இருக்கிறது இந்த தீவண்டி. எப்போதும் தாமதமாகவே வரும் ஒன்றாம் வகுப்பு கண்ணாடி வாத்தியாருக்கும், காலை பத்து மணிக்கு தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரிக்க தயாராகும் ராகவனுக்கும் இந்த ரயில் தான் கடிகாரம்.
புகைப்படத்தில் இப்போது கடந்து கொண்டிருக்கும் பாலத்திற்குக் கிழ் தான் எங்கள் சாமி ஆறு ஓடிகொண்டிருக்கிறது. ( மாகாளியம்மன் கோவில் திருவிழா முடிந்ததும் சாமியை கரைக்கிற இடம்) இந்த பாலத்தில் அமர்ந்து தான் நான் வைரமுத்துவின் கவிதைகளை உரக்கப்பாடுவேன். அப்போது மலை என் குரலை எதிரொலிப்பதை, பள்ளத்தாக்கு என் குரலை ஆழ்ந்த ரகசியம் போல் சேமித்து வைப்பதை, சாட்சியாக நின்று கவனித்து இருக்கிறேன். இந்த ரயிலுக்கு கையசைத்தபடியே மயிலான் தோட்டத்துப் பாறையில் அம்மணமாய் ஓடி வந்து, ஆற்றுக்குள் அந்தர் பல்டி அடித்திருக்கிறேன். உள்ளிருந்து கையசைக்கும் பயணிகளுக்கு நாங்கள் அடிக்கும் அந்தர் பல்டியை சமர்ப்பிப்பது எங்கள் வழக்கம்.
என் உறவுகளை பிரிந்து நகரமாம் நரகத்துழழும் வலியை விடக் கொடுமையானது, கொஞ்ச காலமாய் இந்த ரயில்வண்டியை மறந்திருந்தது. மனசிலிருந்து நீள்கின்றன ஆயிரம் கைகள். மீண்டும் ஒருமுறை வழியனுப்ப.. அதுவரையில் எங்கள் மழலைகளுக்கு சோறூட்டி போகும் ரெயிலுக்கு தேயிலைத் தோட்டத்து சைப்பர் மரங்கள் என் கைகள் என அசைந்துகொண்டே இருக்கும்.


Comments

  1. பழைய நினைவுகளை அள்ளி கொள்ளச்செய்யும் அழகான பதிவு ஷிஜீ...

    தொடரட்டும் ...வாழ்த்துகள் !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆதிக்குடில்

காமுற்ற ஆதிதெய்வம்  நிலத்தில் கீறிய நகசித்திரம் போல்  கண்களை ஆசிர்வதிக்கிறது  அம் மலைக் கிராமம். உச்சியில் பெய்த மழைத்துளிகள் கலகலவென ஓடி வந்து கலங்கிய காவி நதியாகி கால்களை நனைக்கிறது.  பலாமரப்பட்டையில் தன் காதலி பெயரை  எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி. மலை முகட்டின் ஆதிக்குடியில் முதுவன்  காய்ச்சிய  புல்தைலம் மணக்கிறது. புல் குடியில் மூப்பன்  கட்டிய கருகமணித் தாலியுடன் நாளிகேர விளக்கேற்றும் புலத்தி. மலைப் புலத்தியின் சங்கின் சில்வண்டின் ரீங்காரமென குலவைச்  சத்தம். ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து  காட்டு நெல்லியின்  புளிப்பை ருசிக்கும் கருப்பியை கடந்து செல்கிறேன். முள்வேலி மீது படர்ந்திருக்கிறது முல்லையின் கந்தம்.. நாளிகேர நிழலில் வளரும் நந்தியார்வட்டை. தேக்கு மரத்தின் சிறிய  பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற கண்ணாடிக் கூண்டுக்குள் குழந்தை இயேசுவுடன் மரியன்னை. நிச்சயிக்கப்பெற்ற  தேதிகளுக்கு முன்பே  மன்னிப்பை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆலீஸின் வீடு. கால் நூற்றாண்டு கடந்தும் என் ஆன்மாவை கருணையோடு ஆசிர்வதிக்கிறது காதல்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் . சைப்ரஸ் மரங்களின் மூச்சென மலைகளிலிருந்து எழும்பி பள்ளத்தாக்கினை இசையால் நிறைத்துச் செல்கிறது ஆன்மாவின் காதல். நீலகிரி மலை சிகரங்களில் இயற்கையின் மொழியாய் வியாபித்திருக்கிறது அவளின் மௌனம். காட்டின் அடர்ந்த தனிமையிலிருந்து வெளியேறி சிகரங்களைத் தழுவிச் செல்கிறது ஒரு பறவையின் பாடல் வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எழுதிய கவிதையாக மாறி காற்றில் தொற்றிக் கொள்கிறது அவளின் தெய்வீகம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மூடியிருக்கும் கைகளுக்குள் இறுக்கத்தை தவிர வேறெதுவும் இல்லை.  விரல்களை மடல் போல் மெல்லத் திறந்து பார்க்கிறேன். வந்தமரும்  வண்ணத்துப்பூச்சி நீயில்லை. நவம்பர் மழையில் நனைந்து கொண்டே இருக்கிறது. நாளை பூக்குமென்று கனவுகள் காணுமென் காடு. அதிகாலை குளிர் கிழித்து கதிர் ஊசிகள் தைக்கும் போது இதயம் உன்னை நினைத்து கொள்கிறது.  அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் கேள்விகள். என்றேனும் வரக்கூடும்  பதிலாக ஒரு பட்டாம்பூச்சி.  அதிகாலை குளிர் அதிகரட்டி பேருந்து படிக்கட்டில் நான் பின்னிருக்கையில் நீ எண்ணங்கள் ஆயிரம்.  கண்ணதாசன் கைவிட்டான் பாரதி தீக்குளித்தான். ஷெல்லியும் ஷேக்ஸ்பியரும் செத்தே போனார்கள்.  தேன் கூட்டுக்குள் வண்ணத்துப்பூச்சி நெரிசலான பேருந்துக்குள்  நீ.  தொற்றிக் கொண்டது தொல் காப்பியத்துக்கு முன்பு தொடங்கிய  நம் தொல்லியல் காதல்.  ☕☕☕