Skip to main content

ஆதிக்குடில்


காமுற்ற ஆதிதெய்வம் 

நிலத்தில் கீறிய நகசித்திரம் போல் 

கண்களை ஆசிர்வதிக்கிறது

 அம் மலைக் கிராமம்.


உச்சியில் பெய்த மழைத்துளிகள்

கலகலவென ஓடி வந்து

கலங்கிய காவி நதியாகி

கால்களை நனைக்கிறது. 


பலாமரப்பட்டையில் தன்

காதலி பெயரை 

எழுதிப் பறக்கிறது மரங்கொத்தி.


மலை முகட்டின் ஆதிக்குடியில்

முதுவன்  காய்ச்சிய 

புல்தைலம் மணக்கிறது.


புல் குடியில் மூப்பன்  கட்டிய

கருகமணித் தாலியுடன்

நாளிகேர விளக்கேற்றும்

புலத்தி.


மலைப் புலத்தியின் சங்கின்

சில்வண்டின் ரீங்காரமென

குலவைச்  சத்தம்.


ஆற்றுமாமர நிழலில் அமர்ந்து 

காட்டு நெல்லியின் 

புளிப்பை ருசிக்கும் கருப்பியை

கடந்து செல்கிறேன்.


முள்வேலி மீது படர்ந்திருக்கிறது

முல்லையின் கந்தம்..

நாளிகேர நிழலில் வளரும்

நந்தியார்வட்டை.


தேக்கு மரத்தின் சிறிய 

பூக்களால் ஆசிர்வதிக்கப் பெற்ற

கண்ணாடிக் கூண்டுக்குள்

குழந்தை இயேசுவுடன் மரியன்னை.


நிச்சயிக்கப்பெற்ற 

தேதிகளுக்கு முன்பே 

மன்னிப்பை கேடயமாகப்

பயன்படுத்திக் கொண்ட

ஆலீஸின் வீடு.


கால் நூற்றாண்டு கடந்தும்

என் ஆன்மாவை கருணையோடு

ஆசிர்வதிக்கிறது காதல்.


Comments

Popular posts from this blog

பட்டாம்பூச்சிக் கதைகள்

 மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது  அவளது ஞாபகங்கள் . சைப்ரஸ் மரங்களின் மூச்சென மலைகளிலிருந்து எழும்பி பள்ளத்தாக்கினை இசையால் நிறைத்துச் செல்கிறது ஆன்மாவின் காதல். நீலகிரி மலை சிகரங்களில் இயற்கையின் மொழியாய் வியாபித்திருக்கிறது அவளின் மௌனம். காட்டின் அடர்ந்த தனிமையிலிருந்து வெளியேறி சிகரங்களைத் தழுவிச் செல்கிறது ஒரு பறவையின் பாடல் வண்ணத்துப்பூச்சியின் சிறகில் எழுதிய கவிதையாக மாறி காற்றில் தொற்றிக் கொள்கிறது அவளின் தெய்வீகம்.

பட்டாம்பூச்சிக் கதைகள்

ஒரு தேயிலை தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியின்  எளிய குடும்பம் அது.  அந்த மலைகிராமத்தில்  ஒரு அரசு மருத்துவமனையில் 1983ன் மே மாதத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தையை, தூக்கி கொண்டு அங்கும் இங்கும் சில செவிலியர்கள் அலைந்து கொண்டிருந்தனர். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் எப்படி இருக்கும் என்பதும், வாழ்க்கை என்பது எவ்வளவு மகத்துவமான வரம் என்பதையும், பிறந்த முதல் நாளிலேயே வாழ்க்கை அந்த குழந்தைக்கு, கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டது. சவலைப்பிள்ளையான அவன் செவிலியர் அரவணைப்பிலிருந்து தாயின் கைகளுக்கு கையளிக்க பட்ட போது ஒரு தாய் தன் வாழ்வின் துயர் மிகுந்த நாட்களுக்குள் தள்ளப்படுகிறாள்.  ஒரு துளிப்பால் கூட ஒவ்வாமையாக மாறிப் போகும் அந்த குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாய் தேற்றுவதற்குள் செத்துபிழைக்க வேண்டியதாய் இருந்தது. அனைத்தையும் மறுதலிப்பதையே தன் பிறவி குணமாக கொண்டு அந்த குழந்தை வளர ஆரம்பிக்கிறது. முன் கோபமும், முரட்டுத்தனமுமாக அந்த குழந்தை வளரத் துவங்க, பிறவியிலிருந்தே அதை கூர்ந்து கவனிக்கும் தாய் மிகுந்த பதற்றம் அடைகிறாள். தனக்குள் உள்ளொடுங்கிய சுபாவமும், பிடிவாதமும் கொண்டு அவன் வளர துவங்குகிறான். ம